Tamilnadu Legislative assembly ends on 14 sep 2011: Jaya participates all the days

சென்னை: புதிய அரசு அமைந்த பின் துவங்கிய சட்டசபை கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இத்தொடரில், 110வது விதியின் கீழ், 21 அறிக்கைகளை முதல்வர் வாசித்துள்ளார்.சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின், இந்த கூட்டத் தொடர் குறித்து, சபாநாயகர் ஜெயக்குமார் பேசியதாவது:தமிழகத்தின் 14வது சட்டசபை, நல்லவர்களைக் கொண்டுள்ளது. நல்லவர்களது உரைகளும் இங்கு ஒலித்தன. அ.தி.மு.க., ஆட்சி அமைத்த பின், கடந்த மே 23ம் தேதி, சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் துவங்கியது.
முதல் நாளன்று, எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். இத்தொடர், ஜூன் 10ம் தேதி வரை நடந்தது. இரண்டாவது கூட்டத் தொடர், ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி, செப்டம்பர் 14 (நேற்று) வரை நடந்துள்ளது.மொத்தம் 33 நாட்கள் சட்டசபை கூடியது. கவர்னர் உரையில் துவங்கி, இன்று (14ம் தேதி) வரை மொத்தம் 132 மணி நேரம் 14 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. இதில், கடந்த மாதம் 30ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கிய சட்டசபை, மாலை 6.36 மணி வரை தொடர்ச்சியாக, 8.36 மணி நேரம் நடந்துள்ளது. இன்றும், காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நடந்துள்ளது.கவர்னர் உரை, கடந்த ஜூன் 3ம் தேதி இடம்பெற்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நான்கு நாட்கள் நடந்தது. இதில் 34 உறுப்பினர்கள் பேசினர். இவர்களில் ஆளுங்கட்சியினர் 10 பேர், இதர கட்சியினர் 24 பேர். இதற்கு முதல்வர் ஜெயலலிதா, 1.18 மணி நேரம் பதிலளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூன்று மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்தார். பட்ஜெட் மீது, ஐந்து நாட்கள் விவாதம் நடந்தது. இதில், 38 உறுப்பினர்கள் பேசினர். நிதியமைச்சர் 48 நிமிடங்கள் பதிலளித்தார்.இதன்பின், மொத்தம் 54 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது, 19 நாட்கள் விவாதம் நடந்தது. இதில், 177 உறுப்பினர்கள் பேசினர். முதல்வர் 1.10 மணி நேரம் பதிலளித்தார். இதர துறைகள் மீதான விவாதங்களின் போது, 38 முறை குறுக்கிட்டு, 30 நிமிடங்கள் விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர்கள் மொத்தம் 26.27 மணி நேரம் பதிலளித்துள்ளனர்.வெட்டுத் தீர்மானம் 2,621 வரப்பெற்றன. அவற்றில், 2,508 அனுமதிக்கப்பட்டன. கேள்விகள் மொத்தம் 8,585 வரப்பெற்றது. மொத்தம் 159 உறுப்பினர்கள் கேள்விகள் கேட்டிருந்தனர். இவற்றில், 8,555 கேள்விகள் அனுமதிக்கப்பட்டன. அதிகபட்சமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன், 1,129 கேள்விகள் கேட்டு முதலிடத்தில் உள்ளார். அடுத்தபடியாக, அ.தி.மு.க.,வின் குணசேகரன் 593 கேள்விகளும், தே.மு.தி.க.,வின் மைக்கேல் ராயப்பன் 267 கேள்விகளும், அ.தி.மு.க.,வின் விஜயலட்சுமி பழனிச்சாமி 249 கேள்விகளும், இந்திய கம்யூனிஸ்ட் உலகநாதன் 241 கேள்விகளும் கேட்டிருந்தனர். 107 கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அதிகளவு பதிலளித்த அமைச்சர்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் அதிகபட்சமாக 10 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர். சிறப்பு தீர்மானங்கள் எட்டு எடுக்கப்பட்டன. அவற்றில், முதல்வர் கொண்டு வந்தது மூன்று. மொத்தம் 23 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.விதி எண் 110ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா 21 அறிக்கைகளை வாசித்துள்ளார். இந்த விதியே இதனால் தனிச் சிறப்பு பெற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, சட்டசபைக்கு அனைத்து நாட்களும் வந்துள்ளார். இதுதவிர, 95 பேர் அனைத்து நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். 21 ஆயிரத்து 826 பார்வையாளர்கள், சபை நிகழ்ச்சிகளை பார்த்துள்ளனர்.இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார். இதன்பின், சட்டசபை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜயின் அரசியல் பிடித்து விஜய்க்கு வாக்களிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால் நான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்க மாட்டேன், ஆனால் நீங்கள் அப்படியில்லையே!

Ministers of MGR's Assembly: Rare Pics